பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் (ஐ .நா) மக்கள் குடியிருப்பு திட்ட நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ .நா–வின் பொதுச் செயலாளரான அந்தோனியா குத்தரேஸ் மைமுனாவின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து ஐ.நா–வின் பிரதானக் குழுத் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஆசியாவைச் சார்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும். “இந்த நியமனத்தின் வழி மைமுனா வரலாறு படைத்துள்ளார். பினாங்கு மாநிலத்தின் அரசு ஊழியர் இந்த உயர்மிக்க பதவியில் பொறுப்பேற்பது பெருமை சேர்கிறது” என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மைமுனா ஐ.நா–வின் நியமனத்தை ஏற்றுக்கொள்வதாக மாநில அரசாங்கத்திடம் அறிவித்துள்ளார். டத்தோ மைமுனாவின் நியமனம் பினாங்கு மாநிலத்திற்கு மட்டுமின்றி மலேசியாவிற்குப் பெருமை சேர்க்கிறது.
உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழுத் தலைவருமான சாவ் கொன் யாவ் டத்தோ மைமுனாவின் வெற்றிக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்தார். டத்தோ மைமுனா எதிர்காலத்தில் மனித வாழ்விடம், சுற்றுச்சூழல், மக்கள் தொகைக்கான வாழ்க்கை மேம்பாடு மீதான உலகளாவிய வியூகத்தை உருவாக்க இயலும் என்றார்.
“2018 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகளுக்கு நய்ரோபி, கென்யா நாட்டில் பணிநிமித்தம் செய்யப்படுகிறேன். மேலும், ஐ.நா குடியேற்ற நிர்வாக இயக்குனராக புதிய சவாலை எடுத்துக் கொள்ளும் நாள் வரை நகராண்மைக் கழகத் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்றுவேன் என டத்தோ மைமுனா தெரிவித்தார்.