மறுசுழற்சி மையங்களைக் கண்டறிய ‘MAMPAN Directory’ செயலி அறிமுகம்

Admin
img 20240717 wa0062

ஜார்ச்டவுன் – பினாங்கு பசுமைக் கழகம் (PGC) பொதுக் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் நிலையான வாழ்வை ஊக்குவிக்கும் வகையில், இன்று இணைய அடிப்படையிலான ‘MAMPAN Directory’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி பொதுமக்கள் தங்கள் கழிவுகளை அகற்றுவதற்கு அருகிலுள்ள மறுசுழற்சி மையங்களைக் கண்டறிய உதவுகிறது.

 

பினாங்கு மாநில அரசு கடந்த ஜூலை 1 முதல் மீண்டும் அறிமுகப்படுத்திய  திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்கு இணங்க, இந்த செயலி குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.  இதனால் அவர்கள் அருகிலுள்ள கழிவு சேமிப்பு வசதிகளைக் கண்டறிய வசதியாக இருக்கும்.

 

PGC பொது மேலாளர் ஜோசபின் தான் கூறுகையில், இந்த முயற்சியானது கழிவுப் பிரிப்புக் கொள்கையை ஆதரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என்றார்.

 

“இந்த செயலி மூலம் ‘கழிவற்ற சங்கிலியை (Zero Waste Network) உருவாக்கும் ஒரு முயற்சியாகும். பினாங்கு வாழ் மக்கள் மற்றும் வியாபாரிகள் அருகிலுள்ள மறுசுழற்சி நிலையங்கள், பசுமை தயாரிப்புகள் மற்றும் நிலையான தீர்வுகளைத் தேட இதைப் பயன்படுத்தலாம்.

 

“இப்போது, ​​பொதுமக்கள் தங்களின் வரிசைப்படுத்தப்பட்ட கழிவுகளை எங்கு அனுப்புவது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். MAMPAN Directory நமது விலைமதிப்பற்ற வளங்களின் வாழ்க்கைச் சுழற்சியை மூலோபாய ரீதியாக மறுவடிவமைப்பதன் மூலம் கழிவுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

 

“ஒட்டுமொத்தமாக, எங்களிடம் 153 உள்ளீடுகள் உள்ளன, 137 உள்ளீடுகள் பினாங்கில் உள்ளன. சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கணினி தரவுத்தளத்தை நாங்கள் தொடர்ந்து  மேம்படுத்துவோம்,” என்று கொம்தாரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

 

தரவுத்தள வகைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், உணவு கழிவுகள், மின் கழிவுகள், நிலையான இடம், சுற்றுச்சூழல் கல்வி, பூஜ்ஜிய கழிவு கடைகள், நிலையான தீர்வுகள் மற்றும் நிலையான பொருட்கள் ஆகியவை அடங்கும்.

 

மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு பினாங்கு பசுமைக் கழகத்தின் முயற்சியைப் பாராட்டினார். இது பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

 

” எதிர்காலத்தில் MAMPAN Directory வாயிலாக  நமது சமூகத்தில் ஏற்படவிருக்கும் தாக்கம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், கழிவுகளை கணிசமாகக் குறைக்கவும் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

 

“நாங்கள் எங்கள் முக்கிய முழக்கத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம், அதாவது 5R. அவை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மறு சிந்தனை மற்றும்  புதிதாக மாற்றுதல் ஆகும்”.

 

இச்செய்தியாளர் சந்திப்பின் போது PGC இயக்குநர்கள் குழுவினரான டத்தின் பாரதி,  டத்தோ லாரன்ஸ் லிம் மற்றும் செபராங் பிறை மாநகர கழக நகர்ப்புற சேவை இயக்குனர் அகமட் ஜாப்ரி முகமது சராஜூடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.