
தென் செபராங் பிறை பத்து காவானில் ரிம 10 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ஶ்ரீ இராதா கிருஷ்ணா வைர ஆலயம், கலாச்சார மண்டப அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜுலை 5-ஆம் நாள் இனிதே நடைபெற்றது. ஹரே இராம ஆசிரமம் துணையுடன் கட்டப்படும் இந்த ஆலயம் வழிபாட்டுத் தளமாகவும் சமூக-ஆன்மீக நடவடிக்கை மேற்கொள்ளும் சிறந்த இடமாகவும் செயல்படும். 1.633 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த ஆலயம் தென் இந்திய சோழ கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலை பின்பற்றி கட்டப்படும் என்றால் மிகையாகாது.
சீரான தலைமைத்துவமின்றி செயல்படும் ஆலய நிர்வாகங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் ஏறக்குறைய 26 ஆலயங்களில் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. மேலும் வரவு செலவு கணக்குகளில் குளறுபடி, ஆண்டுக் கூட்டத்தை முறையாக வழநடத்துவதில்லை, ஆலயப் பணம், நகைகள் காணமல் போவது தோடர்ந்து ஏற்படுகிறது. எனவே, இந்து அறப்பணி வாரிய சட்ட விதிப்படி பிரச்சணைக்குரிய ஆலயங்களை வாரியம் கைப்பற்றினால், தேசிய சங்க பதிவு இலாகாவின் (ஆஓஎஸ்) பதிவு தானாகவே இரத்தாகிவிடும் என எச்சரித்தார் .

இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கஸ்தூரி பட்டு, பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன், தொழிலதிபர் டத்தோ புலவேந்திரன், ஶ்ரீ ஶ்ரீ இராதா கிருஷ்ணா ஆலயப் பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.